Friday 6 May 2011

தேடுகிறேன்!



அப்பாவைக் காண
வெகுநாள் ஆசை
ஆனாலும் என்மனதில்- அவர்
முழு உருவும் கிடைக்கவில்லை.


அன்றொரு நாள் சந்தையில்
அவர் பின்புறம் கண்டேன்
இன்னொரு நாள் பேரூந்தில் - அவர்
விரைவதைக் கண்டேன்.


ஒரு நாள் ரயில்வே தரிப்பில்
மங்கலாய்த் தெரிந்தார்
ஓடிப் போய்ப் பார்த்த போது - அவர்
உருவின்றிப் போனார்.


அன்று நான் வானொலியில்
அவர் குரலைக் கேட்டேன்
மும்முரமாய்த் தேடியதில்-அவர்
முடிச் சுருளைப் பார்த்தேன்.


கண்ணா மூச்சி விளையாட்டில்
கதி கலங்கிப் போனேன்
இன்னும் நான் தேடுகிறேன்- அவர்
சிரிக்கும் கண்களதை.

No comments:

Post a Comment